Friday, July 23, 2010

மின்சாரத்திற்காக ...


தேவதைகள் ஒளிந்துகொள்ள
அவர்களைத்தேடி அரக்கர்கள் வரும்
மதிய வெய்யில் வெளியில்
போர்க்கள மண்ணில்
அழுந்த விழாத வியர்வை
போர்வாள் அறுத்த தழும்புகள்
சூரியனை பெற்று மின்னிய தேகம்
ம் ...போதும் ...போதுமென
சுவடிஎழுத போதுமான கூர்வலிமையுடன்
காற்றாற்றங்கரையில் நின்றிருந்தேன்

தேவதைகள்
யாருக்காக இங்கே நிற்கிறேனோ அவர்கள்
காப்பாற்றப்பட வேண்டிய தேவதைகள்
கரை நெருங்கிய அடர்ந்த காட்டின்
சிங்கத்தின் தொண்டை இருமலிட
மான்கள் ஒளியும் புதர்களுக்குள்
இடையினை ஓடியாமல் வளைத்து
புற்கள் அழுந்தாமல் அமர்ந்து வருந்தினர்
இவன் ...இறக்கப்படவல்ல

அதோ ...
தூரத்தில் அரக்கர்கள் அவர்கள் ...ஆம்
வெட்டுக்கத்தி ... சடை முடி....
கோர முகம் ... யானை வயிறு
ஹோ ...என்ற நீண்ட இரைச்சல்
கழுகுகள் வட்டமிட ஆரம்பிக்கின்றன
பலி ஒருமையிலா ? பன்மையிலா ?
கேள்விகள் முளைத்து நிற்கின்றன
நெருங்கி வருகிறார்கள்
இடையில் நான்
தொலைவில் தேவதைகள்

என் வாளின் பிடி இறுகுகிறது
தேவதைகள் கடவுளை இறுக்குகிறார்கள்
அரக்கர்கள் கத்திக்கொண்டே வருகிறார்கள்

இந்த ஆர்க்காடு வீராசாமி நல்லாவே இருக்கமாட்டான் மச்சி
காலைல இருந்து இதோட 3 வாட்டி
நிலக்கரி வாங்குனதுல பிரச்சனையாம்
டேய் ! இவன் என்னடா தூங்கிட்டுதான இருந்தான் ...
திடிர்னு பேந்த பேந்த முழிச்சிட்டு இருக்கான்
என்னடா ஏன் ..அப்படி பார்க்குற
டீ சாப்பிட போலாம் வர்றயா ?

சட்டையை அணிந்தபடி நண்பனிடம் கேட்டேன்...
கரண்ட் எப்ப வரும் ?
ஏன் மாமா ?

தேவதைகளும் ...அரக்கர்களும் ...காத்திருக்கிறார்கள்

1 comment:

  1. vetri.. templateaa change pannunga.. unable to read grey colour letter in black background..

    ReplyDelete