.....
அடால்புக்கும் ...அமீனுக்கும்
அன்னை தெரசா
"டேய் !குட்டி பசங்களா ''
என்று
கேசம் கோதியிருக்க வேண்டும்
யாருமன்றி இறக்கும் ஆப்பிரிக்கனைவிட
அனைவருமிருந்து இறக்கும் ஈழத்தமிழன்
இழக்கும் உயிரில் சிலவனவாது
தமிழ் கொண்டு ஏமாற்றி சுகிப்பவர்க்கு
மனித பிழம்பாக தர வேண்டும்
இஸ்ரேல் பாலஸ்தீன பிஞ்சு மழலைகளின்
சிதறிய சதைப்பிண்டங்களின் செல்களிலாவது
ஈரமிருந்து
இல்லாத
கடவுளையும் மனிதனையும் சேர்த்து எரித்து
அமீபாவாகவே திரும்பவும் மாறவேண்டும்
இது என்ன இது வம்பாகிவிட்டதே,
"என் பிள்ளைகள் விரைவில் என்னையே
எரித்து விடுவார்கள் போலவென "
கருணைகொண்டு தன்னைத்தானே வெடித்து சிதறி
இனிமேலாவது இயற்கையோடு வாழுங்களென
சூரியத்தாய் புதுபூமி தரவேண்டும்
ஷேக்ஸ்பியர் கதையில் முற்றில்
தன்னை மாய்த்துக்கொள்ளும் தேவதை
கொஞ்ச தூர
அரசமரத்தடியில்
நாய் ,சரக்கு ,தாடியுடன் தனியே
அமர்ந்திருக்கும் தேவதாஸை கண்டிருந்து
ஒருவருக்கு இருவராயிருக்க வேண்டும்
"விநாயகருக்கு இந்த ஒடக்கான்
என்ன பண்ணுச்சி தெரியுமா
குடிக்க தண்ணி கேட்டப்ப "...
என் வேட்டைக்காலங்களில் என்னோடு
ஏய் வேணாம்ப்பா ...
பாவம்ப்பா என்று
அந்த ஒடக்கானை ஓடவிட்டு ...
என் கோபத்திற்கு
என் ஓட்டை டவுசரையே காரணமாய் கொண்டு
கேலிகளை
வெட்கச்சிரிப்போடு சிதறிவிட்டு
காணாமல் போன
என் ஏழுவயது தோழி ரமா
அப்படியே திரும்ப வேண்டும்
நாங்கள் ராஜ குடும்பத்தினர் ...
காட்டிலிருந்து வழிமாறிவந்துவிட்டோம்
எங்களை எப்படியாவது கொண்டுபோய்
காட்டில் விட்டுவிடுங்கள் என்று
என் கனவில் அடிக்கடி வந்து
கெஞ்சும் சிங்கங்கள்
நேரில் வர வேண்டும்
என் கனவுகளோடு என்னை
முழுமையாக உறங்கவைத்து
சிணுங்கிய வெப்பத்தோடு
இறுக்க அணைத்து
பார்த்து ரசித்து விழித்திருக்கும்
தேவதைகள்
என் போர்வையை விலக்கியவுடன்
காணாமல் போகாமல்
புன்னகையோடு
"எங்கயும் போலடா குட்டி"
இங்கதான் இருக்கிறோம் ...என்று
நெற்றியில் முத்தமிட்டு தலைகோத வேண்டும்
என் எண்ணம் எழுத்து இயக்கம்
என்று இருந்து
மற்றவர்க்காக
என் சிந்தனைகளை அடிமையாக்க இராமல்
காயப்பட்டு
காயப்பட்டு
காயப்பட்டு
என் எண்ணங்களை கொன்றுதீர்க்காமல்
என்னைவிட்டு விலகிச்சென்று கொண்டிருக்கும்
என் சினிமா எனக்கு வேண்டும்
........
என் புதுமைகளின் ....
ஆ ........என்ன விடு !
யார் நீ ?...எதுக்கு தடுக்கற ?
.
எனக்கு வேணும் ...இன்னமும் வேணும் ...இதுக்கு மேலயும் வேணும்
நான் பைத்தியம் இல்ல
அந்த ஊசிய பக்கத்துல கொண்டுவராத
என்ன விடு ...நான் இன்னும் அத முடிக்கவே இல்ல
ஷைன் அவுட் பண்ணாத
எனக்கு பின்னூட்டம் பண்ணுவாங்க
ஆ ...வேணாம் ....ஊசி வேணாம்
........ம்
எனக்கு வேணும்...ம்
இன்னமும் வேணும் ...ம்
இதுக்கு மேலயும் வேணும்
Monday, November 16, 2009
Subscribe to:
Posts (Atom)
