Friday, December 11, 2009

கடல் புறா ...கதை

...
இதில் வரும் நிகழ்வுகள் கற்பனையே
ஆனால் சில தருணங்களில் கற்பனைகள்
படிப்பவரைப்பொருத்து உண்மையாகவும் தெரியலாம்


என் பெயர் கடல் புறா
உங்கள் புருவம் வளைய வேண்டாம்
என்னிடம் ஆச்சரிய குறிகள் இல்லை
என் தந்தையும் தாயும் சாண்டில்யனின்
புத்தக அலமாரியில் காதல் வளர்த்தது
என் தவறில்லை
தவறு சாண்டில்யனிடம்
ஆம்
எதிரியாக கல்கியை பாவித்துக்கொண்டது
எங்கள் வீட்டிற்க்கு நேரெதிர் கல்கிவீடு
அங்குதான் என் காதலி ....
எங்கள் பருவவயது ஒன்றுதான்
அவள் பெயர் சிவகாமி
தொட்டால் வெட்கத்தில் இன்னும் வெளிர்ந்து
வெள்ளையாகிவிடும் வெள்ளை நிறமவள்
அவளை நான் சந்தித்த தருணம்
புறாக்களின் ஒழுக்கம் கற்றுக்கொண்ட தருணம்

ஒருநாள் என் வீட்டில்
அதாவது சாண்டில்யனின்
என்வீட்டில்
கோபுர மாடத்தில் அமர்ந்து
பாதையில் வருவோர் போவோரின் குறிப்பிட்டவரின் மீது
எச்சமிட்டு ரசித்துக்கொண்டிருந்தோம்
சாண்டில்யன் இதை மெய் மறந்து பாராட்டியபடி
தானியங்களை இட்டுக்கொண்டிருப்பார்
ஏனென்றால் அவர்களனைவரும் கல்கியின் ரசிகர்கள்
அவர் திட்டப்படியே நாங்கள் செய்துகொண்டிருந்தோம்
எச்சம் பட்ட மனிதர்கள் முகபாவனையை
ஒளிந்துகொண்டு விரும்பி ரசிப்போம்
அப்போது
ஒரு கோபம்கூடிய இரக்கக்குரல்
ஏன்.. இவ்வாறு ? '' புறாமதி தவறி பிழையிழைக்கின்றீர் ''
அதுதான்
முதன்முதலில் அவளை நான் சந்தித்த தருணம்
புறாக்களின் ஒழுக்கம் கற்றுக்கொண்ட தருணம்
இதைசொல்லிவிட்டு அவள் பறந்து சென்றுவிட்டாள்
அதன்பின் நான் கோபுர உச்சிக்கே செல்லவில்லை

அவளை சந்தித்து மன்னிப்புகோர நினைத்தேன்
மாமல்லபுர புத்தகத்திருவிழாவில் மறுபடியும் அவளை சந்தித்தேன்
அவளுடைய தோழிகளிடம் பேசியபடி
ஒரேகல்லில் செய்த யானையின் மேல் அமர்ந்தோ தவழ்ந்தோ இருந்தாள்
எப்படி பேசுவது என்று தெரியவில்லை
சாண்டில்யனின் விசிறிகள்வேறு என்னைச்சுற்றி
திடிரென்று அவளை நோக்கி பறந்தேன்
அனைவரும் திடுக்கிட்டு கவனிக்க
என் வேகத்தை கூட்டியிருந்தேன் ...
கலவரம் நிகழுமென எச்சரிக்கையாக கொண்டுவந்திருந்த
கற்களை வாயில் கவ்வத்தொடங்கினர் அனைவரும்
அவளை நோக்கி பறந்தபடியே அவள் முகத்தை கவனித்தேன்
அப்படி ஒரு படபடப்பை அந்த புறாமுகத்தில் ஒட்டிக்கொண்டிருந்தாள்
அவளை நெருங்கிய நான் யாருமறியாமல்
அவள் மட்டும் அறியும்படி ஒரு செயலை செய்துவிட்டு
மலைகுகை மாடத்தில் வந்தமர்ந்தேன்


'''

சாண்டில்யன்
''கடல்புறா குறும்புக்காரன்
என்று சொல்வது என் புறக்காதில் விழுந்தது

கல்கியை கவனித்தேன்
அவர் சாந்தப்புன்னகையுடன் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்
பொன்னியின் செல்வன் தந்தவரின் மேன்மையை அன்றுதான் கவனித்தேன்
என்ன எழுதுகிறார் என்று கவனிக்கையில்
என் கண்ணுக்கு
'' பொய்மான் கரடு '' என மங்கலாக விளங்கையில்

வந்து விழுந்தது அழகிய சிறகு ஒன்று
அருகில் அவள்
என்னிடம் பேச்சில்லை மன்னிப்பு வைத்திருந்தேன்
என் உடல் நிலை இழைத்தது பற்றி கேட்டாள்
என்னை கவனிக்கிறாள் என்ற சந்தோசத்தில்
என் புறா உடல் சிலிர்த்துக்கொண்டது
இப்போது மாடத்திற்கு சென்று
மனிதர் ஆடு மாடு நாய்களின் மேல் எச்சமிடுவதில்லை
உணவும் கிடைக்கவில்லை
என் உடல் மெலிந்த காரணம் அவளை
புறாக்கண்ணீர் வடிக்க வைத்தது ...
கூடவே நான் குழந்தைகளின் மேல் எச்சமிட்டதேயில்லை
குழந்தைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னது
அழுத அவளை மிகப்பெரிய புறாசிரிப்பு சிரிக்கவைத்தது

நாங்கள் பழக ஆரம்பித்தோம்
அவ்வப்போது முத்தங்களும்
எங்கள் சந்திப்புகள் அதிகரிக்க
என் சிறகுகள் குறைய ஆரம்பித்தன
அனைவருக்கும் சந்தேகம் வர ஆரம்பித்தது
என் காணாமல் போன சிறகுகள் பற்றி
விசாரணை நடக்க
சாண்டில்யனிடம் என் காதலை ஒப்புக்கொண்டேன் ...
கோபப்பட்டு என்னை கொன்றுவிடுவார் என்று எதிர்பார்த்தால்
தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார் ...

உடனே
தனது உதவியாளனை கூப்பிட்டு
'' புறாவின் காதல் முன் மற்றவை ஒன்றுமில்லை '' இதுவே கதைக்கான களம்
''கடல்புறாவின் காதல் '' இதுவே கதைக்கான தலைப்பு என்று கூறிவிட்டு
என் கைரெக்கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு
கல்கியின் முன் நிறுத்தினார் . ..

அடுத்தநொடி என்னை மறந்து
அவர்கள் சமாதானமாகி ஒருவரை ஒருவர் கட்டிக்கொள்ள
நான் என் புறாவைத்தேடி
எங்கும் கண்படாமல் ஏமாற்றமுடன் அவர்கள் முன் நிற்க
கல்கி நடந்தவற்றை கூறினார் ...

சற்று நேரத்திற்கு முன்னர்தான்
மேலைசாளுக்கியப் புறாக்கள் அவர்கள் நாட்டிற்க்கு
என் சிவகாமியை கடத்திசென்றதாக ...
நீ பன்னிரெண்டு வருடங்கள் காத்திருந்து
படையெடுத்து சென்றால் அவளை மீட்டு வரலாம் ...
அதுவரை அவள் உனக்காக சபதமிட்டு காத்திருக்கலாம் என்று
அவர்கதையின் முடிவை என் மேல் திணிக்கப்பார்க்க...
சாண்டில்யனும் அதை ஆமோதிக்க...

...


கதையின் இறுதியில் பொய்யை புனையும் எழுத்தாளர்களின்
அறிவுரையை கேட்க்காமல் உடனே கிளம்பி வந்தேன்
வழியில்
வேடனின் வலையில் மாட்டிக்கொண்டேன்
வேடனிடமிருந்து தப்பிக்க வலையோடு பறந்தேன்
அப்போது
''புத்தம் சரணம் கச்சாமி '' என்ற குரல் கேட்டது
உங்களை கண்டேன் ...
உங்கள் முகத்தில் அன்பு தவழ்ந்தது
கண்டிப்பாக நீங்கள் இலங்கையை சேர்ந்த புத்தபிச்சுவாக இருக்கமாட்டீர்கள்
என்ற நம்பிக்கையுடன் என் கதையை முழுவதுமாக கூறிவிட்டேன் ...
வேடன் வருவதற்குள் இந்த வலையை எடுத்துவிட்டு
என் புறாவை தேடிச்செல்ல வழி கொடுங்கள் அய்யா

அந்த புத்தபிச்சு அர்த்தமுடன் மெல்ல புன்னகை செய்தார்

.........................

பின் குறிப்பு -

ஒரு புறாவால் அத்தனை பக்கங்களை புரட்டி
கடல் புறாவையோ
சிவகாமியின் சபதத்தையோ
படிக்கமுடியவில்லை
ஆம் என்னைத்தான் சொல்கிறேன்
என் ஐயமெல்லாம்
கடல்புறா கரையேறுமா
சிவகாமியின் வழியில் வரும் புத்தபிச்சு நல்லவரா
இவ்வளவு தூரம் என்னுடன் வந்தீர்களே ஏதாவது புரிகிறதா
யாராவது ஏதாவது சொல்லுங்க வேடன் வருவதற்குள்